‘கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘அரசியலில் இடம்பெறும் மோசடிகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் வாக்களித்தனர்’. ‘அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘எமக்கு விசாரணை செய்யும் அதிகாரம் கிடையாது’. ‘அவற்றுக்காகக் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவை விசாரணைகளை முன்னெடுக்கும்’. ‘சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடரும்’என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்’. ‘மறைக்கப்பட்ட வழக்குகள் மீள விசாரிக்கப்படுகின்றன’.
‘அவை தொடர்பில் முறையாக விசாரிக்கப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றமிழைத்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்



