‘இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும்’ என்று இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிறி வோல்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது வழிகாட்டுதல் வழங்கினார்’ என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேவை ஏற்படுமாயின் இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க எந்த நேரத்திலும் தயாராவிருப்பதாகவும் சுவிட்சர்லாந்துத் தூதுவர் உடன்பாடு தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, ‘வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
