ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகப்போர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு சென்றபோது, புதினிடம் நேரிலும் இதுகுறித்து மோடி வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி உக்ரைன் சென்றிருந்தபோது, ‘‘ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் உள்ளது’’ என்றும் திட்டவட்டமாகதெரிவித்தார். போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறும், இதில் உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர்மோடி உறுதிபட கூறியிருந்தார்.
‘‘உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை’’ என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் உண்மையாக முயற்சி மேற்கொள்கின்றன. அந்த நாடுகள் இதில் நடுவர்களாக செயல்பட முடியும். துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அமல்படுத்தப்படாத ஒப்பந்தங்கள், இனிமேல் நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.
புதினின் இந்த கருத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாதயார் என்பதை காட்டும் விதமாக உள்ள தையடுத்து, புதினை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி,அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அனுப்பி வைப்பதாக கூறினார்.
இந்த நிலையில், அஜித் தோவல் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளார் என்றும் அவர் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. உக்ரைன் தலைவர்களுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபடுவார் என தெரிய வருகின்றது.
இந்தியாவின் தீவிர முயற்சியால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி திரும்பினால், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மேலும் உயரும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.