ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதி மன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக் கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என
தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –
“2015 ஜனாதிபதி தேர்தலின்போது அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மக்களிடம் ஆணை கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கான பதவி காலத்தை ஆறில் இருந்து ஐந்தாக குறைத்தல், நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை ஐந்தாக நிர்ணயித்தல், நிறை வேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தல் போன்ற திருத்தங்களும் அவற்றில் உள்ளடங்கும். அவற்றை அடிப்படையாகக்கொண்டே 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்றம், அரச தலைவராக பிரதமர் இருத்தல் வேண்டும் என்பது உட்பட நான்கு விடயங்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து மேற்படி நான்கு விடயங்களும் கைவிடப்பட்டது.
அதேவேளை பதவிக்காலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டது. ஆறு வருடங்களை ஏழாக்குவதாக இருந்தால்தான் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஐந்தாக குறைப்பதற்கு அவசியமில்லை என தெளிவாக தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஒருநாள்கூட ஜனாதிபதியால் அப்பதவியில் நீடிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.



