தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமாம் ஒட்டுக்குழுவின் தலைவரைச் சந்தித்த பின்னர் மகிந்தா கருத்து

மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன் என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்தராஜபக்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமானமுடிவொன்றை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற சிறீலங்கா இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தனை பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்தராஜபக்ஸ நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

இன்று முற்பகல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வருகை தந்த மகிந்தராஜபக்ஸ சுமார் 30 நிமிடங்கள் சந்திகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகையினை தமிழ் மக்கள் அனுஸ்டித்துவரும் நிலையில் பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடியதாகவும் வாழ்த்து தெரிவித்தாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மகிந்தராஜபக்ஸ.

முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் அதேபோன்று மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இன்று இங்கு பிள்ளையான் அவர்களை சந்திக்க வந்துள்ளேன் அவரை பார்த்து பேசினேன் அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் ஏற்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே அவரை வந்து நான் வாழ்த்தி சென்றேன்.

தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் இம்முறை தேர்தலில் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். தப்பான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்.

காரணம் இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்களுக்கு ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எவ்விதமான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு பார்த்தால் தெரியும் மட்டக்களப்பில் நான் செய்த வேலையை விட ஏதாவது வேலை நடைமுறைப்படுத்தப்படவில்லை நீங்களே பார்க்கலாம்