தமது கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்கள் இரண்டு பேரும் புறக்கணிப்பாளர்களானால் தாங்கள் அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தலை புறக்கணிக்கும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு விடுத்த அழைப்பின் ஊடாக சந்திப்பொன்று நேற்று (26) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் பதில் வழங்கவில்லையெனவும் இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் பட்டதாரிகளினால் முன்வைக்கப்பட்டது.
பட்டதாரிகளின் கோரிக்கைகளை தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.