இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும். அதற்காக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல் ல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நேற்று புதன்கிழமை நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
“நான் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை. இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளேன் அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளேன். 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சியாகவுள்ளது. நாட்டை அழித்தவர்களுடன் எமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை. அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளையோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ எ னக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை , நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும். போதைப்பொருள் கலாசாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை.
எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் . அதற்காக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும் .
எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளன கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுங்கள்” என்றார்.