பொதுத் தேர்தலில் 30 கோடி ரூபாவும், 3 ஆசனங்களும் கேட்ட தமிழ் அரசியல்வாதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றால், 30 கோடி ரூபாவும் பொதுத் தேர்தலில் மூன்று ஆசனமும் வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் மலையகத் தலைவர் ஒருவர் பேரம் பேசியதாகவும், அந்தப் பேரம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே அந்தத் தலைவர் மொட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்(19) ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.சிறிதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம.உதயகுமார், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ராமசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அழகுமுத்து நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்,

குறிப்பிட்ட தொழிற்சங்கத் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்த கோரிக்கை வெற்றி பெறாத காரணத்தினால் எதிரணி வேட்பாளருக்கு முன்வைத்த அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதனாலேயே இன்று அவர் மொட்டு சின்ன வேட்பாளருக்கு ஆதரவளிக்கின்றார் போலும்.

மொட்டு சின்னத்திற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும், இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது சஜித் பிரேமதாசாவே என்பதை நான் ஆணித்தரமாகக் கூற விரும்புகின்றேன்.

எனவே நுவரெலியா மாவட்டத்திற்கு அன்ன சின்னத்திற்கு வாக்களிக்கவுள்ள அனைத்து தொழிற்சங்க அரசியல் அபிமானிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணமாக 5000 ரூபாவை தேயிலை சபையின் மூலம் நாம் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்த போதும் மாற்றுத் தொழிற்சங்கம் ஒன்று நடவடிக்கையின் காரணமாக இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.