இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கே உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவருகின்றன. அதேவேளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளிற்கு ஆதரவாக தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளைக் கடைப்பிடித்து செயற்பட்டுவருகிறார்கள்.
அவர்களின் தாயக மக்கள் மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டுவந்துள்ளது. அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், இயற்கைப் பேரிடர்களின் போதும், பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம் கொடுத்த போதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்திட்டங்களிலும் நேரடியாகவும் எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம். எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்பட கட்சி ஆயத்தமாக உள்ளது.
கடந்த சில நாள்களிற்கு முன் ஐக்கிய இராச்சியதில் இலண்டன் நகரில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டதாக சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும், வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்’ அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கே உண்டு. இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை” என்று அவா் தெரிவித்துள்ளாா்.



