2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாயின் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். இதற்காக மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் உறுதிப்பட அறிவிக்காதுவிடின் தனித்து வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சிறீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கட்சி மட்டத்தில் உயர்மட்ட பேச்சுகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது அமெரிக்காவிலுள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ மெய்நிகர் வழியாக கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுகளை முன்னெடுத்து
வருகின்றார்.
இறுதியாக நடந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் இறுதியான அறிவிப்புக்கு மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்குமாறு பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்புடன் உள்ள தம்மிக பெரேரா தற்காலிகமாக பின்வாங்கியுள்ளார் என்றும் தெரிய வருகின்றது. மறுபுறம் இருவருமே தேர்தலில் களமிறங்காவிடின் சிறீ லங்கா பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், இதன்போது ஷசீந்திர ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க உத்தேச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், ஜனாதிபதி ரணில் தான் போட்டியிடுவதை உறுதியாக தெரியப்படுத்தவில்லை.
ஆகவேதான் ஜனாதிபதியின் அறிவிப்பு மார்ச் மாதம் இறுதிக்குள் கிடைக்காவிடின் சிறீ லங்கா பொதுஜன பெரமுன தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.