ஆட்கடத்தல்,மாணவர்களை படுகொலைசெய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட படையினர் அப்பாவிகளா? – தம்பர அமில தேரர்

யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அநுராதபுர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார். யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே தவிர, பிரதம நீதியரசரை நியமிப்பதற்கான தேர்தல் இல்லை. நீதிமன்றத்தினால் குற்றச்செயலொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை.

அவ்வாறிருக்க கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் ஹிட்லராகுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்பச் செயலாளராக இருந்தபோது ஊடகவியலாளர்கள் அச்சத்தினால் ஓடினார்கள். ஓடாதவர்களை அவர் படுகொலை செய்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்து, ஊடகவியலாளர்களைக் கண்டால் கோத்தபாய ராஜபக்ஷ ஓடக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர்களை பொதுவான மக்கள் மேடைக்கு விவாதத்திற்காக அழைத்தபோது கோத்தபாய வரவில்லை. அவருடைய பழைய குணவியல்புகள் இன்னமும் மாறவில்லை. அதிகாரத்தின் மீதான மோகம் மாறவில்லை. அவரால் கடந்த ஆட்சியின் போது எத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் வைத்திருப்பவர்கள் அவருக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.