பங்களாதேஷின் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் கால அவகாசம்

பொருளாதார நெருக்கடி காரணமாக திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு இலங்கை கோரியதை அடுத்து, 200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், பங்களாதேஷின் த டெய்லி ஸ்டாருக்கு பங்களாதேஷ் வங்கியின் பணிப்பாளர்கள் குழு, திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே 2021 இல் இலங்கை பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்று, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில், இலங்கை தனது 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என அறிவித்தது.

இரு நாடுகளுக்குமிடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை கடனை மார்ச் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இலங்கை இன்னமும் அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கக் கோர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நேரத்தில் காலக்கெடுவை நீடித்துள்ளது.

புதிய காலக்கெடுவின்படி, இந்தாண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

பங்களாதேஷ் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் உட்பட பல தரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவியை நாடியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, பங்களாதேஷின் கையிருப்பு ஜனவரி 11 அன்று 32.52 பில்லியன் டொலராக இருந்தது.