இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமான EMSC வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மக்களை பாதுகாப்புக்காக இருக்கும்படியும் இம்மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக EMSC ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “மீண்டும் அடுத்த சில மணிநேரங்களில் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவின் பிரதான தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 162 பேர் பலியாகினர். இறந்தவர்களில் பலர் பள்ளி மாணவர்கள். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனிடையே, மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.