27 ஆயிரம் மெற்றிக்தொண் உரம் தேவை- உற்பத்தி செய்ய இளைஞர்களிற்கு அழைப்பு

வவுனியா மாவட்டத்திற்கு 27 ஆயிரம் மெற்றிக்தொண்ணுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவையாக உள்ளது. அதனை விரைவாக உற்பத்தசெய்ய வேண்டியுள்ளமையால் முயற்சியாளர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களங்களை தொடர்புகொள்ளுமாறு வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.விஸ்ணுதாசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

விவசாயத்திற்கான இராசாயன பசளை மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்ப்பட்ட சிறுநீரக பிரச்சனை, சூழல் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு இராசாயன பசளைகளை முற்றுமுழுதாக நிராகரித்து சேதன இயற்கை பசளைகளை உற்பத்திசெய்யும் திட்டத்தினை அரசு முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக இயற்கை பசளையை குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யமுடியாது. குறைந்தது நான்கு தொடக்கம் ஐந்து மாதங்கள் தேவை. தற்போது எமக்கு இருப்பதும் அந்த காலப்பகுதியே. உற்பத்தி செய்வதற்கான காலம் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் விரைவாக அதனை முன்னெடுக்க வேண்டும். அதற்கு எமது திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சின் முழுமையான உதவிகளும் கிடைக்கும். எமது மாவட்டத்தில் இயற்கை உரங்களை தயாரிப்பதற்கான சகல வளங்களும் உள்ளது. அதனை உற்பத்தி செய்பவர்களே பற்றாக்குறையாக உள்ளது.

எனவே இளைஞர்கள்,படித்தவர்கள் இதற்கு முன்வரவேண்டும். எமது மாவட்டத்தில் 27 ஆயிரம் மெற்றிக்தொண்ணுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவையாக உள்ளது. இவற்றை பூர்த்தி செய்வதற்கு அதிகமானவர்கள் முன்வர வேண்டும். இல்லாவிடில் பசளை தட்டுப்பாடு, விளைச்சல் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படலாம். எனவே இதற்கான திட்ட முன்மொழிவுகளை கமநல அபிவிருத்தி திணைக்களங்களிற்கு சமர்ப்பித்தால், அதற்குரிய உதவிகள் எங்களால் வழங்கப்படும் என்றார்.