21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை முதல் அரசியலமைப்பின் 21 வது திருத்தமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றயைதினம் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் கடந்த மாதம் (ஒக்டோபர்) 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இரண்டாம் மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவு செய்யப்பட்டது. 44 பேர் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம், 21ஆவது அரசியலமைப்பு திருத்தமாக நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.