20 ஆவது திருத்தச் சட்டம் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு; முக்கிய அம்சங்கள் என்ன?

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வரைவு, அரசாங்க சட்ட வரைவாளரால் வரையப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இந்த வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சட்டமா அதிபரின் கருத்து மற்றும் ஒப்புதல் கிடைத்த பின்னர், இந்த சட்ட வரைவு தேவையான மாற்றங்கள் செய்யப்படுவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது,

அதன் பின்னர் இந்த திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு துணைப் பிரதமர் அல்லது மூத்த அமைச்சுப் பதவியை வழங்கும் வகையில் யோசனை முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அவ்வாறான உள்ளடக்கங்கள் ஏதும் வரைவில் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை 19 ஆவது திருத்தச்சட்டத்தில் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு இருந்த தடை நீக்கப்படுவதாக இந்த திருத்த வரைவில் குறிப்பிடப்பட்டள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.