இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்பமான கடந்த 11 நாட்களில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது 03 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னாருக்கும் நெடுந்தீவு கடற்பரப்புக்கும் இடையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) இரவு அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 08 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இரணைதீவு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, கிளிநொச்சி நீரியல் வளத்துறையினர் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த 08ஆம் திகதி யாழ்ப்பாணம், காரைநகர் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம், இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



