சஹ்ரானை விட பெரும் பயங்கரவாதியாக சுரேஷ் சலே?

சனல் 4 ஆவணப் படத்தின் அடிப்படையில் சஹ்ரானை விட மிகப் பெரும் பயங்கரவாதியாக மக்களால் சுரேஷ் சலே கணிக்கப் படுவதாக கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே பல்வேறு கொலைகளுடன் தொடர்பு பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்ட கொலைக் குற்றவாளி பிள்ளையானுடன் இணைந்து ஒரு குடும்பத்தின் அரசியல் சுய இலாபத்திற்காக ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு உடந்தையாகவும் கைக்கூலியாகவும் தொழிற்பட்டுள்ளார் என்கின்ற விடயம் மிகவும் கேவலமானதும்  மன்னிக்க முடியாததுமான தேசத்துரோக குற்றச்சாட்டாகும்.

சனல் 4 ஆவணப் படத்தின் மூலம் தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப் பட்டுள்ள சுரேஷ் சலே யிற்கு நீதி விசாரணையின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்  சார்ந்த சமூகமும் கூட அவருடனான சகல தொடர்புகளையும்  துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.