தமிழகத்திற்கு மேலும் 10 பேர் அகதிகளாக வருகை: இதுவரை அகதி தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக  மேலும் 10 பேர் நேற்று  தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், வாழ்வாதாரம் தேடி கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் 199 பேர்  அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த உதயசூரியன் (47) அவரது மனைவி பரிமளாதேவி (44) மகன் தீமோத் (23) டிலாக்சன் (17) ஜோயர் (12), வவுனியா மாவட்டம் பூவரங்குளத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி ( 44), மகன் விபூஷன் (24) சுதர்ஷா (04), வவுனியா மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த ரீகன் (17) மற்றும் யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியைச் சேர்ந்த நிதர்ஷன் (20) ஆகிய 10 பேர் தலைமன்னாரிலிருந்து நேற்று முன்தினம் இரவு படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். இவர்களை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை மண்டப முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வரையில் தமிழகத்தில் இலங்கையில் இருந்து தஞ்சம் கோரிய பொருளாதார அகதிகளின் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளன.