விமல் வீரவன்ஸ இன ஐக்கியத்துக்கு சாபக்கேடு- வேலுகுமார்

“இன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.  இவர்போன்ற அரசியல்வாதிகள்தான் நாட்டில் இனவாதத்துக்கு தூபமிட்டு இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளனர்” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

மன்னாரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட பெயர்பலகையை நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கி சமூகத்துக்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கியுள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸவின் செயலை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பியால் இன்று (21) விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மன்னாரிலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ கடந்த 18ஆம் திகதி திறந்துவைக்கும்போது,  திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது.

இதனைகண்டு கொதிப்படைந்த விமல் வீரவன்ஸ, குறித்த பெயர் பலகையை உடன் நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு பனை அபிவிருத்திச் சபையின் தலைவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

இதன்படி தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து, அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தனது சண்டித்தனத்தை வடக்கிலும் காட்ட ஆரம்பித்துள்ளார்.

அவரின் இந்த குரோதச்செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம்.

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகமொழியாக தமிழை பயன்படுத்துவதற்கும் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விரு மாகாணங்களிலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்புடைய நடவடிக்கையாகும். கடந்தகாலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுவந்தது.

இந்நிலையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளைக்கூட கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பறிக்க முற்படுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைபோட்டவர்கள் தற்போது தமிழ் மொழியில் பெயர் பலகை வைப்பதற்கும் வேட்டு வைத்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என செல்லும் இடங்களிலெல்லாம் ஒப்பாரி வைக்கும் ராஜபக்ஷ சகோதரர்களும், அவர்களின் சகாக்களும், தமிழ் பேசும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை ஆராய்வதில்லை.

விமல் வீரவன்ஸ போன்ற இனவாதிகளை ஏவிவிட்டு தமிழ் மக்களை ஒடுக்குவீர்கள் என்ற அச்சத்தாலேயே மாற்று சக்திக்கு வாக்களித்தனர். மக்கள் நினைத்தது சரி என்பதையே தற்போதைய சம்பவங்கள் நிரூபித்துவருகின்றன.

அன்று பண்டாரநாயக்க அரசாங்கத்தால் தனி சிங்கள மொழி சட்டம் திணிக்கப்பட்டதால்தான் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு வழிவகுத்த காரணிகளுள் இதுவும் ஒன்றாகும்.

எனவே, மீண்டும், மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படாமல், நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி இலங்கையர்களாக முன்நோக்கி பயணிப்பதற்கான சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும்” என,  வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.