விக்கினேஸ்வரனுக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்; டெனீஸ்வரன் அறிவிப்பு

“எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” என வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உட்பட பல சமூக ஆர்வலர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவிலேயே டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அவரது பதிவின் விபரம் வருமாறு;

“நண்பன் குருபரன் அவர்களே,

தங்களுடைய கருத்தை மதிக்கின்றேன், தங்களைப் போன்றே தற்போது பலர் தொடர்பு கொண்டு வருகின்றனர். என்னுடைய நோக்கம் மதிப்புக்குரிய எமது முன்னாள் முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதல்ல, எந்த தவறும் செய்யாமல் வீண்பழி சுமத்தியது பிழையென்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடுத்தேன். அந்த நேரத்தில் எவரும் இதில் உள்ள நியாயப்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க முன்வரவில்லை. எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நியாயப்பாடு ஒன்று மட்டுமே.

எவருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டுமென்று நினைப்பவன் நான் அல்ல, அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டவனும்மல்ல, எமது முதலமைச்சர் தான் எனக்கு பதவியைத் தந்தவர், அது வேண்டும் என்று ஒருதடவை என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயம் அவருடைய சொல்லுக்கு மதிப்பளித்திருப்பேன். அதை தவிர்த்து தன்மானத்தோடு விளையாடினால் அது யாராக இருந்தாலும் அதற்கு எதிராக நிற்பேன்.

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன். குருபரன் தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன்.

நன்றி
இப்படிக்கு
பா.டெனிஸ்”