வாக்காளர் இடாப்புப் பதிவுகளில் தமிழ் மக்கள் அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்; சுரேஷ்

2020 ஆம் ஆண்டுக்கான வாக்களர் இடாப்புப் பதிவுகளை தமிழ் கூடுதலான கரிசனை எடுத்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“2020 ஆம் ஆண்டுக்கான வாக்களர் இடாப்புக்கள் பதியும் வேலைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு போன்ற காரணிகளாலும் முப்படைகளின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாகவும் மீள் குடியேற்றம் இன்னும் முழுமையடையவில்லை. மேற்கண்ட காரணங்களால் வடக்கு மாகாண சனத்தொகை என்பது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏறத்தாள பதினைந்து லட்சம் மக்கள் வெளிநாடுகளில் வாழ்வதாகச் சொல்லப்படுகின்றது. நடந்து முடிந்த யுத்தத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது இதன் காரணமாக எமது சனத்தொகை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த குடிசன தொகையின் வீழ்ச்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய பத்து நாடாளுமன்ற ஆசனங்கள் ஏழாக சுருங்கியிருக்கின்றது. தமிழ் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுடைய தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க ஒவ்வொரு வருடமும் தேர்தல் ,டாப்புக்களில் பதிவுகள் இடம்பெறும் பொழுது வாக்களிக்கத் தகுதியுடைய முற்பது தொடக்கம் நாற்பதாயிரம் பேர் விடுவிக்கப்படுவதாகவும் அறிகின்றோம். தமிழ் மக்களின் இந்த குடிசன வீழ்ச்சியை அனைத்து கிராம சேவகர்களும் புரிந்திருக்கின்றார்கள். ஆகவே அந்த வகையில் இந்த பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது வாக்களிக்கும் வயதெல்லை உடைய அனைவரையும் பதிவுசெய்ய கிராம சேவகர்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என கோருகின்றோம். அத்துடன் குடும்பஸ்தர்களும் தங்களது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தாலும் அவர்கள் இலங்கைக் கடவுச்சீட்டைக் கொண்டவர்களாகவோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டவர்களாக இருப்பின் அவர்களது பெயர் விபரங்களையும் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். இந்த பதிவுகளை மேற்கொள்வதில் ஏதாவது சங்கடங்கள் இருப்பின் நீங்கள் விரும்பிய கட்சித் தலைமைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களூடாக பதிவு தொடர்பாக ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த பதிவுகளை சரியான முறையில் செய்யாது விடுவோமாக இருந்தால் எதிர் காலத்தில் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்கள் இன்னும் குறைந்து போகலாம்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் ஆரம்பமாகி இருப்பதனால் பொதுமக்களும் கிராம சேவகர்களும் இதில் கூடுதலான கரிசனை எடுத்து இந்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.