ரிஷாத் சகோதரர் விடுதலையின் பின்னணியில் இரகசிய அரசியல் ஒப்பந்தம்; கர்தினால் சந்தேகம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாத் பதியுதீன் திடீரென விடுதலை செய்யப்பட் டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான அவ ரின் விடுதலையின் பின்ன ணியில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நேற்று கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

விடுதலை செய்யப்பட்ட ரியாத் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும், தற்போது கூறப்படும் விடயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயல்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது.

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம்”என்றார்.