யாழில் வைத்து சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்!

ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் 11ஆவது ஆண்டு விழா நேற்று யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என எந்த கட்சிக்கும் நிலையானதொரு கொள்கை கிடையாது.

தற்போதும் நாம் புதுப்புது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில் விக்னேஸ்வரனும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை பற்றியே நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். யாழ் மக்களைப் பற்றி மாத்திரமே பேசுகின்றனரேயன்றி நாட்டைப் பற்றி பேசுவதில்லை.

யாழில் மாத்திரமல்ல , நுவரெலியா , மாத்தளை மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் இருகின்றனர்.

நாடு முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நாம் ஒன்றிணைந்தால் மாத்திரே போராட்டங்களில் வெற்றி பெற முடியும். எனவே அது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் தற்போது தோன்றியுள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் நிம்மதியாக வாழ முடியும்.

இணைந்து பயணிப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள தலைவர்களை குறை கூறிக் கொண்டிருப்பதை தவர வேறு எதனையும் செய்வதில்லை.

வறுமை என்பது தமிழ், சிங்களம் என்றில்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகும்.

யாழிலிருப்பவர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். அரச சேவைகளிலும் இராணுவத்திலும் இணைந்து சேவையாற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி அமைச்சு பதவிகளை வகிக்க வேண்டும். அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்கின்றோம்.

அடுத்த அமைச்சரவையில் வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான அமைச்சர்கள் அங்கத்துவம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றார்.