யாழில் மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு பொலிஸ் பிரிவு

யாழ். வடமராட்சி கிழக்கில் மணற்கொள்ளையை தடுப்பதற்காக 30பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சேனதீரவால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை, பொற்பதி மற்றும் மணற்காடு ஆகிய பகுதிகளில் பெருமளவான மணல் கொள்ளையிடப்பட்டு வருகின்றது. இதனால் அப்பிரதேசங்களுக்குள் கடல் நீர் உள்புகும் அபாயம் இருப்பதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இருந்தும் மணல் கொள்ளை தொடர்ந்த வண்ணமே இருந்தது. பாதுகாப்புப் படையினர் இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாததால், அந்த ஊர் மக்களே மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை மணல் கொள்ளையைத் தடுக்க அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மீது மணல் கொள்ளையர்கள் கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியதுடன் தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற 3மோட்டார் சைக்கிள்களையும், ஒரு டிப்பர் வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை அடுத்தே மேற்படி சிறப்பு பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.