பாகிஸ்தான் முன்னாள் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளரான பர்வேஷ் முஷாரப்பிற்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி இரத்துச் செய்து விட்டது.
தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் முஷாரப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்தத் தண்டனை ஒரு அதிர்ச்சியாகவே அங்கு பார்க்கப்பட்டது.
அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் முஷாரப் மரண தண்டனையை இரத்துச் செய்து உத்தரவிட்டது. துபாயில் தலைமறைவாக இருக்கும் முஷாரப் இந்த மரண தண்டனை விதிப்பை பழிவாங்கும் அரசியல் என்று விமர்சிக்க, பாகிஸ்தான் இராணுவம் ஏமாற்றம் தெரிவித்தது.
லாகூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனைத் தீர்ப்பை சட்ட விரோதம் என்று அறிவித்ததோடு, புகார் பதிவு செய்தது, நீதிமன்ற உருவாக்கம், அரசு வழக்கறிஞர்கள் தேர்வு அனைத்தும் சட்டவிரோதம் என்பதால், ஆகவே அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இனி முஷாரப் மீது புதிய வழக்கைத் தான் தொடுக்க முடியும். அதுவும் அமைச்சரவை அனுமதி பெற்ற பிறகுதான் வழக்குத் தொடர முடியும்.
2013ஆம் ஆண்டு தொடங்கிய முஷாரப்பிற்கு எதிரான தேசத்துரோக வழக்கின் பின்னணி என்னவெனில் 2007இல் அரசியல் சாசனத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பித்தார் முஷாரப், இந்த வழக்கு பல இடையுறுகளுடன் நடந்து வந்தது. கடைசியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அது சட்ட விரோதம் என்று தற்போது முஷாரப் மரண தண்டனையை இரத்துச் செய்துள்ளது லாகூர் உயர் நீதிமன்றம்.



