நாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது யஸ்மின் சூக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமக் குழுவினர், மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் மனித உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறிவைத்து 69 மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை இந்த இரு ஆணைக்குழுக்களும் ஆவணப்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இவர்களை குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயல்களை கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் தீவிரமாக இருந்தமையால், சிலர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, தனது முன்னாள் இராணுவப் பிரிவு உறுப்பினர்களை பதவிகளுக்கு தொடர்ந்து நியமிப்பதன் மூலம் அரசாங்கம் முழுவதும் தனது இராணுவ அதிகாரத்தைப் பலப்படுத்தியுள்ளார். அத்துடன் பொலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த கால குற்றங்களை விசாரித்த பலர் தற்போது அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். போர்க்குற்றவாளிகள் தான் இப்போது நாட்டில் பதவியில் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.