முழங்காலிலிருந்து பிள்ளைகளைத் தேடி கதறி அழுத தாய்மார்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று (20) கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை ஏ9 வீதி ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் 4 ஆவது ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்துள்ள இன்றைய நாளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கறுப்பு துணிகளால் கண்களை கட்டி முழங்காலில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களிற்கு வழங்கியிருந்தனர். இதன்போது இரண்டு தாய்மார் மயக்கமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், எம் கே. சிவாஜிலிங்கம் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தனர்.