முல்லைத்தீவில் மணற்கொள்ளை;கையூட்டு பெற்று கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல் துறையினர்

மணல் கொண்டு செல்வதற்கான வாகன வழித்தட அனுமதி அண்மையில் நீக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரவு நேரங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரங்களில் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றப்பட்டு களவாக கொண்டு செல்லப்படுகின்றது .

அளம்பில் பகுதியில் உப்புமாவெளி பிரதேசம் அதனை அண்டிய கடற்கரையோரமாக உள்ள மணல் திட்டுகள் இரவோடு இரவாக கனரக இயந்திரங்கள் மூலம் அகழப்பட்டு கடத்தப்படுகிறது.

மணலைக் கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதி தேவையில்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே இந்த மணல் அகழ்வு நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

இந்த கொள்ளையர்களுடைய நடவடிக்கையை சிறிலங்கா காவல்துறையினர் அறிந்திருந்தும் அவர்கள் மணல் கொள்ளையர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையை கண்டும் காணாமல் விட்டு இருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

இந்த மணல் அகழ்வு தொடருமேயானால் உப்புமாவெளி உடுப்புக்குளம் கிராமங்களுக்கு அரணாக கடல் உட் புகாதவாறு காத்துக்கொண்டு காப்பாற்றி வைத்திருக்கும் இந்த மண் திட்டுகள் விரைவாக அழிந்துபோகும் அபாயம் எழுந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.