முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் தடைகள் விதிக்கப்பட வேண்டும்: காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்பட வேண்டும்’ என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக நேற்று  (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
‘இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது’.
‘இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும்’.
‘இவ்வாறு தடைவிதிக்கப்பட வேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர்.

‘அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும்’ என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

‘அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு’ என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

‘இதேவேளை 19 காணாமல் போன உறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர்’.
‘அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை. நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை’.

‘மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்’ என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.