மிருசுவில் படுகொலை இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கோத்தபயா தீர்மானம்

யாழ். மிருசுவிலில் 8 தமிழர்களை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சார்ஜன்டிற்கு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பொது மன்னிப்பு அளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்ற பொது மக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் தப்பி வந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் விசாரிக்கப்பட்டு, அதில் 5 இராணுவச் சிப்பாய்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2015 ஜுன் 25அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவிற்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலின் முன்னர் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.