மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ப் பேச்சு; முக்கிய விடயங்களில் இணக்கம்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது.

இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் இதன்போது பேசியதாகவும், சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நாளை சனிக்கிழமை திருமலையில் கூடவிருக்கும் நிலையில் இந்த சமரச முயற்சி இடம்பெற்றிருக்கின்றது.