மாவீரர் நாளை நினைவு கூர நீதி மன்றங்கள் ஊடாக தடை

மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று முடிவு செய்துள்ள நிலையில், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு மாவட்ட நீதிமன்றங்களிலும் பொலிஸார் இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை நினைவேந்துவதை தடுப்பதற்கு அரசும், இராணுவமும் முயற்சிக்கும் நிலையில் அதனை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று மாலை, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றுகள் ஒத்திவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.