மாணவனின் வீட்டில் தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு அவரது மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவன் பகிடிவதை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 3 இளைஞர்களை சங்கானை பிரதேசத்தில் வைத்து மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரிடம் இருந்து இரும்பு கம்பிகள், தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மனிதர்களுக்கு காயம் ஏற்படுத்தும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.