முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பானது, வடக்கு கிழக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்வாங்கி தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரது வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது சேவையை முன்னெடுத்து வருகிறது.
அவ்வாறே தமது உறுப்பினர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கிடையே போட்டி நிகழ்வுகளையும் நடாத்தி வருகிறது அந்தவகையில் இவ்வாண்டுக்கான போட்டிநிகழ்வுகளை றோட்டறி கழகத்தின் அனுசரணையில் ஆரம்பித்திருக்கிறது.
இந்த போட்டி நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி இடம்பெற்றுள்ளது. தமது உறுப்பினர்களை அணிகளாக பிரித்து அவர்களுக்கிடையில் குறித்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழை அமைப்பின் தலைவர் ஸ்ரீகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் கிளிநொச்சி றோட்டறி கழகத்தின் உறுப்பினர்கள், உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்துகொண்டனர்.