மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவேன் – சஜித்

எனது தந்தையரின் வழியில் சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், மாகாணசபைகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வழங்குவேன் என ஐ.தே.கவின் அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

நேற்று (31) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவிலில் மாதிரிக் கிராமம் ஒன்றை திறந்துவைத்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க இன்னும் தெரிவுசெய்யாத போதும் சஜித் பிரேமதாசா அதற்காக போட்டியிட்டு வருகின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

13 ஆவது திருத்தச்சட்டம் மிகவும் குறைவான அதிகாரங்களையே கொண்டுள்ளது. அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணமுடியும்.

தேர்தலின் போது எல்லோரும் இதனை பேசுவதுண்டு ஆனால் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும் அதிகமான தீர்வு என வெளிநாடுகளில் பேசும் அரசியல்வாதிகள் உள்நாட்டில் அதற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர்.

ஆனால் அதனை நான் செய்யமாட்டேன், எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன். நாட்டை பிரிக்காது அதிகாரங்களை பகிர்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.