மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக அதிகரிப்பு – நேற்றும் 11 பேருக்கு தொற்று உறுதி

மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 11 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய 11பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வு கூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 104 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் முல்லேரியா ஆய்வுகூடத்தில் சோதனைக்கு உட்படுத்தியோரில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 433 பேருக்கு கொவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவாலையில் ஒருவருக்கும், மல்லாகத்தில் ஒருவருக்கும், அளவெட்டியில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டது.