மணற் கொள்ளைக்கு எதிராக வடமராட்சியில் பேரணி

யாழ். வடமராட்சியில் மணல் அகழ்வைக் கண்டித்து “மண் வளத்தைக் காப்போம்“ என்னும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (22) நடைபெற்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், மணல் விநியோகம் செய்யும் வாகனங்களின் வழி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து யாழ். மாவட்டத்தில் மணல் அகழ்வுகள் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து வடமராட்சியில் இன்று காலை 9.30 மணியளவில் 50இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சட்டவிரோதமாக மணல் அகழும் இடங்களை குறித்தனர்.

அத்துடன் சட்டவிரோத மணல் வளம் சூறையாடப்படுவதை தடை செய்யும்படி கோரி வடமராட்சி கிழக்கு பிரதேச சபை செயலாளருக்கு மனு கையளிக்கப்பட்டது. இந்த மனுவை பிரதேச சபை செயலாளருக்குப் பதிலாக அவரின் உத்தியோகத்தர் பெற்றுக் கொண்டார்.