மட்டு.மாநகரசபை கூட்டத்தில் உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் 

மட்டக்களப்பு மாநகரசபையின் 34வது அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபை அமர்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பான நிலையில் கடந்த அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அதனை அங்கிகரிக்கமாறு சபை முதல்வரினால் கோரப்பட்டது.

கடந்த அமர்வின் கூட்டறிக்கையில் இளைஞர் விவசாய பண்ணை அமைப்பதற்கு மாநகரசபையினால் காணி வழங்கப்பட்டது தொடர்பிலான விடயங்களில் பிரச்சினையுள்ளதாகவும் அவை திருத்தப்படவேண்டும் எனவும் இதன்போது மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

காணிக்குரிய நிலையியல் குழுவொன்று மாநகரசபையில் உள்ள நிலையில் காணி அதிகாரங்களை முற்றுமுழுதாக மாநகரசபை முதல்வர் கையிலெடுக்கும் வகையில் குறித்த தீர்மானத்தில் காணப்படுவதாகவும் அவை திருத்தப்படவேண்டும் எனவும் இதன்போது பிரதிமுதல்வர் தெரிவித்தார்.

எனினும் இது கடந்த அமர்வில் ஆராயப்பட்ட விடயம் எனவும் இந்த அமர்வில் குறித்த விடயத்தினை ஆராயவேண்டுமானால் பிரிதொரு தினத்தில் அது பிரேரணையாக கொண்டுவரப்பட்டே ஆராயமுடியும் எனவும் தற்பொழுது கூட்டறிகையில் ஏதேனும் பிழையிருந்தால் மட்டுமே திருத்தமுடியும் எனவும் மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்களிடையே இது தொடர்பிலான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலும் பல்வேறுவாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

சபை அமர்வினை ஒத்திவைத்து இதன்போது மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேலினால் விளக்கமொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.கடந்த அமர்வின் கூட்டறிகையில் கடந்த அமர்வில் நடைபெற்ற விடயங்களை மட்டுமே பதிவுசெய்யமுடியும் என்றும் இது தொடர்பில் வேறு ஏதாவது நடவடிக்கையெடுக்கவேண்டுமானால் பிரிதொரு பிரேரணை கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டே அதனை மாற்றமுடியும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த கூட்டறிக்கையினை அங்கீகரிக்குமாறு கோரியபோதிலும் அதனை அங்கீகரிக்கமுடியாது காணிகுழுவின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலான தீர்மானம் காணப்படுதனால் அதனை திருத்திய பின்பே அங்கீகரிக்கமுடியும் என மாநகரசபையின் பிரதி முதல்வர் தெரிவித்தபோதிலும் மாநகரசபை முதல்வரினால் குறித்த கூட்டறிக்கை அங்கீகரிக்கப்பட்டு சபை அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

இதன்போது மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் மாநகரசபை முதல்வரினால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.