மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27வயதுடைய வாழைச்சேனை,சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.