மக்கள் எதிர்ப்பால் திட்டத்தை கைவிட்ட படையினர்

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் படையினருக்கான தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்கும் திட்டம் கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.சிறிலங்கா படையினரிடையே கொரோனாத் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியை தனது தனிமைப்படுத்தல் மையமாக மாற்ற படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

படையினருக்கு சொந்தமான எத்தையோ பாரிய படைமுகாம்கள் இருந்தபோதும் குறிப்பாக கோப்பாய் கல்வியியற் கல்லூரியை தம்வசப்படுத்த படையினர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்தது.

தெற்கில் இருந்து தமிழர் தாயகப்பகுதிகளுக்கு மக்களை தனிமைப்படுத்தலுக்காக அதிகளவில் கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்கனவே மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்திவந்த நிலையில் இந்த நடவடிக்கை மக்களை போராடவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து படையினர் தமது திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது