மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்கள் குறித்த பிக்குவால் ஆபகரிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்து அத்து மீறி நுழைந்து தமிழர்களுக்குச் சொந்தமான மேச்சல் காணிகளை பிடித்து துப்பரவு செய்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர் ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராமசேவையாளர், கரடியனாறு பொலிசார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும். நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று பௌத்த தலைமையிலான குழுவினர் கூறுகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் கூறியே தாம் இங்கு வந்ததாக குறித்த பிக்கு கூறுகின்றார்.
ஆளுநரும் அவர்கள் கட்டாயம் குறித்த சிங்கள குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய காணி வழங்க வேண்டும் என்று கூறினார்.
சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் முடியவில்லை.
பிக்குவின் இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் என மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் சீனித்தம்பி தியாகராஜா தெரிவித்தார்.
இப்பகுதி அபகரிக்கப்படுமானால் கால்நடைவளர்ப்பாளர்கள் தமது தொழில்களை இழந்து தற்கொலைசெய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
காலம்காலமாக தாங்கள் கால்நடைகளை மேய்க்கும் பகுதியினை அபகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையவேண்டும் எனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.