போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு இந்தியா அங்கீகாரம்

இந்திய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 25 – 29 வரை இடம்பெறும்  கல்விச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர்.

இந்தப் பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்கள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இம்மாதம் 26ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தலைமையதிகாரி மற்றும் பிரிகேடியர் நவ்பிரீட் சிங் அளங் ஆகியோரை சிறிலங்கா இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா வரவேற்று இராணுவத் தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற உயரதிகாரிகள் இராணுவத் தளபதியை  சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூராஜ் பங்ஷஜயா, கருத்தரங்கிற்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி உயரதிகாரிகளுக்கு இராணுவத்தின் தற்போதைய பதவிகள் மற்றும் பணிகளை விளக்கினார். பின்னர் இந்த உயரதிகாரிகள் குழுவினர் பத்தரமுல்லவில் அமைந்துள்ள இந்திய சமாதான படையணி நினைவுத் தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களை நினைவுபடுத்தி தங்கள் கௌரவ அஞ்சலிகளை செலுத்தினர்.

அதன் பின்னர் இந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதியைச் சந்தித்தனர்.

இந்த தூதுக் குழுவில் இராணுவம், கடற்படை, இந்திய ஆயுதப்படைகளின் விமானப்படை அதிகாரிகள், பங்களாதேஸ் ஆயுதப்படைகள், பூட்டான் ஆயுதப்படைகள் சவூதி அரேபிய ஆயுதப்படைகள் மற்றும் பதினொரு துணைவர்கள் அடங்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே லெப். ஜெனரல் சவேந்திர சில்வா என்ற போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், ஐநாவும், மேற்குலக நாடுகளும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ள நிலையில் இந்தியா தனது படை அதிகாரிகளை அனுப்பி அவரை சந்தித்து வருவது அவருக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது.