போரிலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் – யஸ்மின் சூக்கா சிறப்பு நேர்காணல் – 2

மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இன மத மொழிகளை கடந்து தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற் கொண்ட இன அழிப்பு செயற்பாடுகளையும், இறுதி யுத்தத்திலே இலங்கை அரசு மேற் கொண்ட போர்க்குற்றங்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக அவர் தீவிரமாக கடமையாற்றிவருகிறார். குறிப்பாக இலங்கை அரசபடைகள் தமிழ் பெண்கள் மீது மேற் கொண்ட வன்முறைகளின் சாட்சியங்களை தொகுத்து ஐ.நா.மன்றத்திடம் கையளித்து உலகில் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

இந்த நிலையில் யஸ்மின் சூக்கா அவர்களுடன் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளத்தின் குழு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

ஏறத்தாள ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பல விடயங்கள் ஆராயப்பட்டன. நாம் யஸ்மின் சூக்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மிகவும் நீண்டதாக அமைந்ததால் அதனை பகுதிகளாக இங்கு தருகின்றோம்.

கேள்வி: இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் இலங்கை அரச படைகளினால் இழைக்கப்பட்ட கொடூரங்களை உங்களால் வழிநடத்தப்படும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் (ITJP) ஆவணப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பங்களிப்பை இதுவரை வழங்கியிருக்கிறது என்பதைக் கூறமுடியுமா?

பதில்: 2011ம் ஆண்டு ITJP ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூவர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை நிறைவுசெய்திருந்தது. அந்தக் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். டெனா, பிரான்சிஸ் கரிசன் போன்றோர் இந்த நிபுணர் குழுவுக்கு உதவியளித்துக்கொண்டிருந்தார்கள். அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பலதரப்பினரிடமிருந்தும் எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கிடைத்திருந்தன. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு செயற்றிட்டத்தை நிறுவ நாங்கள் முடிவு செய்தோம்.

போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவது எமது முக்கிய நோக்கமாக இருந்தது. ஐக்கிய நாடுகள் தாபனம் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு அப்போது இருந்தது. ஆரம்ப கட்டத்தில் எங்களால் தயார்செய்யப்பட்ட அறிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐநா நிபுணர் குழுவின் பணியைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைகள் நடைபெற்று, இறுதியாக 2015ம் ஆண்டு இணை அறிக்கை வெளிவர காரணமாக அமைந்தது.

2011 இலிருந்து 2015 வரை இக்காலப்பகுதி நீண்டிருந்த போதிலும், உண்மையைச் சொல்லப்போனால், இச்செயற்பாடுகளின்றி ஐ.நாவின் விசாரணை முயற்சிகள் சாத்தியமான நிலையை அடைந்திருக்க மாட்டாது என்றே நான் கருதுகின்றேன். ஓஐஎஸ்எல் என்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட அமைப்பு தனது பணிகளைச் செய்ய நாங்கள் உதவினோம். ஒரு புறத்தில் எம்மிடமிருந்த வாக்குமூலங்களை நாங்கள் அவர்களிடம் கையளித்ததுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களுடனும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடனும் அந்த அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்தோம். ஐக்கிய நாடுகள் தாபனம்  இலங்கை தொடர்பான தனது பணிகளைக் காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கு வேண்டிய உதவிகளை வழங்குவதே அப்போது எமது முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இணை அறிக்கை வெளிவந்ததன் பின்னரான காலப்பகுதியில், அதாவது 2016, 2017ம் ஆண்டுகளில் – இலங்கையில் ஒரு புதிய அரசு பதவியேற்றிருந்ததுடன் சர்வதேச சமூகமும்  காணாமல் போனோர் பணிமனை (ஓஎம்பி) போன்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கக் கூடியவிதத்தில் இலங்கைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு நீதிமன்றை நிறுவுவதும் அவ்வேளையில் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே நேரத்தில் 2016ம் ஆண்டளவில் நீதியை நிலைநாட்டுவதற்கான உண்மையான ஆர்வத்தை இலங்கை அரசு கொண்டிருக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் தெளிவாகவே புரிந்துகொண்டோம்.

london conf போரிலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் - யஸ்மின் சூக்கா சிறப்பு நேர்காணல் - 2அந்த நேரத்தில் இலங்கை அரசு மக்களின் கருத்தை அறிந்துகொள்ள ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தது. நீதிப்பொறிமுறைகள் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள், செய்யப்படவேண்டிய பரிகாரங்கள் என்பன தொடர்பாக எம்மிடம் வாக்குமூலத்தை அளித்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அந்த மக்கள் மத்தியில் நாங்களும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம். எமது ஆய்வின் முடிவுகளை நாம் பகிரங்கப்படுத்தினோம்.

அதுமட்டுமன்றி இலங்கையில் அரசினால் இந்த நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கும் எமது அறிக்கையை நாம் அனுப்பி வைத்தோம். எம்மை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயம் என்னவென்றால் இலங்கை அரசோ, தாம் நியமித்த குழுவின் அறிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்பதாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்துவதோடு அதற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதையும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

குற்றவியல் தொடர்பான நீதிப்பொறிமுறையையே பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள். இலங்கை அரசாங்கத்திடம் நீதியை நிலைநாட்டும் ஆர்வம் இல்லாத ஒரு பின்புலத்தில் பொறுப்புக்கூறலை எப்படி முன்னெடுக்கலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் எப்படிச் செயலாற்றலாம் என எண்ணிப்பார்த்தோம். இவ்விடயங்கள் தொடர்பாக பல மூலோபாயங்களை நாங்கள் வகுத்தோம். உண்மையை மீட்டெடுக்கும் செயற்பாடு அவற்றிலே முக்கியமானதொன்றாக இருந்தது. போரிலே குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட முடிவு செய்தோம். இவ்வாறாகத்தான் போர்க்குற்றங்களைப் புரிந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான ஆவணக்கோப்புகளை மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் வெளியிடத் தொடங்கினோம். போர்க்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்பை வகித்த ஜகத் ஜயசுரிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தூதுவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிச் சட்டங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தொடங்கினோம். யாரோ சிலர், ஒருவேளை பிரேசில் நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினராகக்கூட இருக்கலாம் அவருக்கு முன்கூட்டியே தகவலைக் கொடுத்துவிட்டார்கள். இதனால் அவர் திடீரென லத்தீன் அமெரிக்க நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் திடீரெனத் தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை உற்றுநோக்கும் போது அங்கு நீதி நிலைநாட்டப்பட்டதையே நாம் உணருகின்றோம். உண்மையிலே ஜகத் ஜயசுரிய தானாக விரும்பி நாட்டுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு தங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அங்கு இருந்தது. அவர் திடீரென நாடுதிரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அவர் மிகவும் குழப்பமடைந்திருந்தார். அப்போது அவர் சொன்ன முதல் விடயம் தன்னால் இனிமேல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாதென்பதும் அமெரிக்காவுக்கு இனி ஒருபோதும் தன்னால் பயணம் மேற்கொள்ள முடியாதென்பதையும் குறிப்பிட்டார். அவர் தப்பிச் சென்ற காரணத்தினால் அவர் மீது வழக்கைத் தொடர்வதில் நாம் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரது பெயர் பட்டியலில் இருக்கிறது. அவரால் இலங்கைக்கு வெளியே பயணங்களை மேற்கொள்ள முடியாது. அப்படி அவர் பயணஞ் செய்தால் அவர் கைதுசெய்யப்பட்டு பிரேசிலுக்கோ அல்லது ஏதாவதொரு இலத்தீன் அமெரிக்க நாடொன்றுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்து அவருக்கு இருக்கிறது. இரண்டாவதாக சவேந்திர சில்வா தொடர்பாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். இவரை இலங்கை அரசு ஒரு முக்கிய பதவிக்கு நியமித்திருந்தது.

2009 Mulli போரிலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் - யஸ்மின் சூக்கா சிறப்பு நேர்காணல் - 2சவேந்திர  சில்வா தொடர்பாக நாங்கள் ஒரு விரிவான ஆவணக் கோப்பைத் தயாரித்தோம். ஏனென்றால் சவேந்திர சில்வா யார் என்பதையும் போர்க்காலத்தில் அவர் எப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதையும் பொதுவாக எல்லோரும் மறந்திருந்த நிலையே காணப்பட்டது. அவர் பற்றிய ஆவணக் கோப்பை நாங்கள் பகிரங்கப்படுத்திய போது பல நாடுகளின் அரசுகளிடமிருந்தும் எங்களுக்குப் பல அழைப்புகள் வந்தன. சவேந்திர சில்வா பற்றிய ஆவணக் கோப்பின் ஒரு பிரதியை தமக்கும் அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டிருந்தார்கள். அவர் தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்யும் தறுவாயில் தாம் அவருக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்ற முடிவை மேற்கொள்ளும் கடப்பாடு அந்த அரசுகளுக்கு இருக்கிறது.

இந்த ஆவணக் கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களின் காரணமாக பல அரசுகள் அவருக்கு விசா வழங்க மறுக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஒரு போர்க்குற்றவாளியாக சவேந்திர சில்வா குற்றம் சாட்டப்படக்கூடிய நிலை இருப்பதை இந்த ஆவணக்கோப்பு சுட்டிக்காட்டுகின்றது. மே பதினெட்டாம் திகதி எமது இணையத்தளத்தில் இந்த அறிக்கையை பதிவேற்றம் செய்த பின்னர் வோஷிங்டனுக்கு நான் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அங்குள்ளவர்கள் அந்த அறிக்கையைப் பார்த்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் போரின் போது நடைபெற்ற விடயங்களைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள்.

இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக போரிலே இறந்தவர்கள் மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு முக்கியமான விடயம் என்பதை நாம் இனங்கண்டு கொண்டோம். இதன் விளைவாக இணையத்தளத்தில் ஒரு செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருக்கிறோம். இவ்விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற பற்றிக் போல் என்பவரது உதவியை நாம் நாடியிருக்கிறோம்.

மே 17, 18, 19 ஆகிய திகதிகளில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டு அங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை நாம் கணக்கிடும் போது அங்கே உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒரு உறுதியான முடிவுக்கு நாம் வரக்கூடியதாக இருக்கும். இன்றும் கூட யார் உண்மையில் உயிரோடு இருக்கிறார்கள்? யார் இறந்துவிட்டார்கள்? என்பதை எம்மால் கூறமுடியாதிருக்கிறது. எமக்குக் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்களின் உதவியுடன் ஒரு சிலரது உடலங்களை நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மைதான். இது பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது.

இதன் விளைவாகத் தான் இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு பட்டியலை உருவாக்க நாம் முடிவுசெய்தோம். இத்தருணத்தில் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளின் புகைப்படங்கள் உங்களிடம் இருக்குமாயின் அல்லது இராணுவத்திடம் யாரையாவது நீங்கள் கையளித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் அல்லது அக்காலப்பகுதியில் யாராவது இராணுவப் பகுதிக்கு செல்வதை நீங்கள் அவதானித்திருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை தயவு செய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

எமக்குக் கிடைக்கும் இத்தரவுகளைப் பயன்படுத்தி போரின் இறுதி நாட்களில் உண்மையில் எவ்வளவு பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வரக்கூடியதாக இருக்கும். எமது இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 350 தனிநபர்களின் விபரங்களை நாம் பதிவேற்றம் செய்திருக்கிறோம். இவர்களில் 29 பேர் சிறுவர்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.  இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எமக்குக் கிடைத்த தரவுகளை நோக்கும் போது கிட்டத்தட்ட 500 பேர், போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்று இவ்விடயத்தில் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் பற்றிக் போல் எமக்கு அறியத்தருகிறார்.

நேர்காணலின் முதலாவது பகுதியை வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்:

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா