போராட்டத்தின் மத்தியில் செஞ்சோலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது

கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில் (14.08) சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சோலை பணியாளர்கள் நினைவாக தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திற்கு செல்கின்ற வீதியின் ஆரம்ப இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவுத்தூபி வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை புதுக்குடியிருப்பு பொலிசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த தூபியில் கொல்லப்பட்டவர்களின் படங்களை பதிக்கவோ அவர்களின் பெயர்களை எழுதவோ தடை விதித்திருந்தது. நினைவுத்தூபியை மட்டும் கட்டுவதற்கு அனுமதித்திருந்தது.

இதனால் நினைவுத் தூபியில் மாணவர்களின் புகைப்படங்களை பதிக்க முடியாது விட்டாலும் செஞ்சோலை வளாக வீதி என எழுதப்பட்ட நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவுத் தூபியினை உயிரிழந்தவர்களின் உறவுகள் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்து, நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.