ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியது இந்த போராட்டத்துக்கு காரணம் என சமூக வலைதளங்கள் மீது ரஷ்யா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக கூறி ட்விட்டர் நிறுவனம் மீது ரஷ்ய அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரனையில், குற்றம் நிருபிக்கப்பட்டு ட்விட்டர் நிறுவனத்துக்கு 1 இலட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரஷ்யாவின் அரசு தகவல் தொடர்பு கண்காணிப்பு குழு, 30 நாட்களுக்குள் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கத் தவறினால் ட்விட்டருக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.