பொலிஸாரை இலக்கு வைத்து வைக்கப்பட்ட வெடிபொருள்: பொலிஸ் அதிகாரி ஒருவர் காயம்

வடமராட்சீயில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததையடுத்து அப்பகுதி விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகிலுள்ள முச்சந்தியில் காலை 7 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேடஅதிரப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்புத் தேடுதல்களும், சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத மணல் அகழ்வுகள், மணல் கடத்தல்களைத் தடுக்கும் நோக்குடன் அந்தப் பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், அந்தச் சந்திப் பகுதியில் நின்று வீதிச் சோதனை நடவடிக்கைகளிலும்ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் வழமையான வீதிச் சோதனை நடவடிக்கைக்காக அந்தச்சந்திப் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்திறங்கியபோது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.