பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் போராட்டம் – அனைவரையும் ஒன்றிணையுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்படும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய  க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

“சுதந்திர தினத்தை ஒட்டி எடுக்கப்படும் தமிழ் மக்கள் சார் சிவில் சமூக நடவடிக்கைகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்த வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் முடிவெடுத்துள்ளன.

மட்டக்களப்பில் இருந்து சீலனும் (திரு.சிவயோகநாதம்) கிளிநொச்சியில் இருந்து கலாவும் (திருமதி.கனகரஞ்சினி) இது சம்பந்தமாக எமது ஆதரவைக் கோரியுள்ளனர்.

தமிழர்கள் வெறுமனே பேச்சோடு மட்டும் நின்று விடாமல் அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டியுள்ளது. போராட்டங்களை யார் பின்னின்று நடத்துகின்றார்கள் என்பதிலும் பார்க்க யாருக்கு எமது நிலை பற்றித் தெரியப்படுத்தலாம் என்பதையே எமது குறிக்கோளாக வைத்து காய்களை நகர்த்த வேண்டும்.

2015ம் ஆண்டு எமது இனப்படுகொலை பிரேரணையை வடமாகாண சபை நிறைவேற்றியதும் அதனால் பதட்டப்பட்டவர்களில் ஒருவர் கௌரவ திரு.சுமந்திரன் அவர்கள். இன்று அவர் மாறிவிட்டார். அவர் இந்த மக்கள் சார் சிவில் நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவரை அவ்வாறு மாற்றியது எமது மக்களே.

மக்கள் மனம் வைத்தால் எதனையும் நாம் பெறலாம். ஆகவே மக்கள் மன எழுச்சியாக நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற எமது தமிழ் மக்கள் யாவரும் தமது மனமுவந்த ஆதரவை அவர்களுக்கு நல்க வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.