பொது ஜன பெரமுனவுடன் கூட்டமைப்புக்கு இரகசிய உடன்படிக்கை ; குற்றஞ்சாட்டும் விக்கினேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாகக் காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பைப் பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றிக் கூட்டமைப்பும் மாறிமாறி கருத்து தெரிவிப்பது, இரகசிய உடன்படிக்கையின் கீழேயே எனத்தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு;

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாக காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பை பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றி கூட்டமைப்பும் மாறிமாறி கருத்து தெரிவிப்பது, இரகசிய உடன்படிக்கையின் கீழேயே.

இப்படி பேசினால் தெற்கில் அவர்கள் வாக்கு பெறலாம். அதேவேளை, வடக்கில் அவர்கள் விரும்பும் கூட்டமைப்பினர் வெற்றியடையலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறவேண்டுமென ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு காரணமுள்ளது. எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசு சர்வதேச பொறியில் சிக்குவதற்காக வாய்ப்புள்ளது. நல்லாட்சி அரசு சர்வதேசப் பொறியிலிருந்து தப்பிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவியதைப்போல, எதிர்காலத்தின் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது கட்சியினரும் பெற்றுக்கொள்ள விரும்புவதைப் போலதெரிகின்றது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், பயணத் தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசு எப்படி இலங்கையைப் பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.