வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடை விதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அப் பகுதியில் சிறுவர் பாடசாலை ஒன்று இருக்கின்றது. அப் பாடசாலையில் வயலுக்கு செல்பர்கள் மட்டுமே தங்கியிருந்து வயலுக்கு செல்வார்கள். ஆனால் அப் பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்பரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள்.
குறித்த கிராமத்தில் வசித்த மக்கள் தம் காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்றனர். தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவள திணைக்களத்தினருக்கு வழங்கியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் உட்செல்ல இராணுவத்தினர் தடை விதித்த நிலையில், இது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம் இது தொடர்பாக முறையீடு செய்த போது இவ்விடயம் தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக தமக்கு கூறியிருந்தும் இதுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில், தற்போது 15 குடும்பத்தினரே இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.